Translate

Thursday, March 14, 2013

நண்டு சாப்பிடுவோம்!




அல்லாஹ்வின் கூற்றையும், அவன் திருத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் மதிப்பவர்கள் அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பொருந்தாதக் காரணங்களையும், உதவாத தத்துவங்களையும், ஒரு சில அரபிப் புத்தகங்களின் கருத்துக்களையும், அல்லாஹ்வின் கூற்றுக்கு எதிராகப் பயன்படுத்துவது முஸ்லிம்களின் நடைமுறையாக இருக்கக் கூடாது. நம் முன்பே அளித்துள்ள விளக்கங்களையும் ஆதாரங்களையும் மீண்டும் படித்துப் பாருங்கள்!
அல்லாஹ் பொதுவாகக் கடல் பிராணிகளை ஹலாலாக்கியதாகக் கூறி இருக்கும் நிலையில் அதில் தன்னிஷ்டத்துக்கு விளக்கம் கூறவும். பல நிபந்தனைகளை விதிக்கவும் எவருக்கும் உரிமை கிடையாது. எத்தனை காரணங்களை அவர்கள் கூறினாலும் அவை ஏற்கத்தக்கதல்ல; எத்தனை நிபந்தனைகளை அவர்கள் போட்டாலும் அவை செல்லத்தக்கதல்ல. இதை நாம் சொல்லவில்லை. நபி(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.
“எவன் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றானோ, அவை ஒரு நூறு நிபந்தனைகளானாலும் அவை செல்லத்தக்கதல்ல (பாத்தில்)
அறிவிப்பவர் :அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
எந்தக் கிதாபானாலும் புதுப்புது நிபந்தனைகளை விதிக்க அவர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இது பற்றி இன்னும் அதிக விளக்கம் பெற பின்வரும் நபிமொழியை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
“அல்லாஹ் சில கட்டளைகளை இட்டிருக்கிறான்; அவற்றை வீணடித்து விடாதீர்கள்! சில வரம்புகளை விதித்துள்ளான்; அவற்றை மீறாதீர்கள்! சில விஷயங்களைப் பற்றி எதுவும் கூறாதிருக்கிறான்; மறதியின் காரணமாக அல்ல. மாறாக உங்களுக்குப் பேரருளாக! அவற்றைப் பற்றி சர்ச்சை செய்யாதீர்கள்.  அறிவிப்பவர்: அபூஸஃலபா(ரழி) நூல் : தாரகுத்னீ.
“அல்லாஹ் எதை ஹலாலாக்கினானோ அது ஹலால். எதை ஹராமாக்கியுள்ளானோ அது ஹராம். எது பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டானோ, அது உங்களுக்காக அவன் விட்டுக் கொடுத்ததாகும். அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸி(ரழி) நூல்கள் : திர்மிதீ, இப்னுமாஜா.
“அல்லாஹ் எதை ஹலாலாக்கினானோ அது ஹலால். எதை ஹராமாக்கினானோ அது ஹராம். எதைப்பற்றி அவன் ஒன்றும் சொல்லவில்லையோ, அது அவன் உங்களுக்கு வழங்கிய சலுகையாகும். அவன் சலுகையை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில் அல்லாஹ் எதனையும் மறக்கக்கூடியவனல்ல.” அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரழி) நூல்கள் : ஹாகிம், பஸார்.
“நண்டு தவளையைப் போல் உள்ளது” என்றெல்லாம் காரணம் கூறுவதைவிட்டுவிட்டு குர்ஆன், ஹதீஸ் வழியில் செல்வோம். நண்டு சாப்பிடுவோம்! விருப்பமில்லாவிட்டால் சாப்பிடுபவர்களைக் குறை கூறாதிருப்போம்.
*******************************
பெரிய விருந்து!
நபி(ஸல்) அவர்கள் ஜைனப்(ரழி) அவர்களை மணமுடிக்கும் போது, ஒரு ஆட்டை அறுத்து திருமண விருந்து அளித்தார்கள். வேறு மனைவியரை மணமுடிக்கும் போது அளித்த விருந்தை விட இது தான் பெரும் விருந்தாக இருந்தது என்று அனஸ்(ரழி) அறிவிக்கிறார்கள். (அதாவது நபி(ஸல்) அவர்கள் அளித்த பெரிய விருந்தே ஒரு ஆடு தான்). நூல் : புகாரி, முஸ்லிம்.

No comments:

Post a Comment