Translate

Tuesday, March 19, 2013

மதீனாவின் சிறப்புகள்



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை ஏற்படுத்துகிறவர் மீது அல்லாஹ்வுடைய.. வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்!" 
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
அனஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்" 'பனூ நஜ்ஜார் குலத்தினரே! (உங்கள் இடத்தை) எனக்கு விலைக்குத் தாருங்கள்!" என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தினர் 'இதற்குரிய விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்!" என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணை வைப்பவர்களின் கப்ருகளைத் தோண்டுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அவர்களின் கட்டளைப்படியே பாழடைந்த இடங்கள் சீர் செய்யப்பட்டன் பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன பள்ளிவாசலின் கிப்லா திசையில் (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை வரிசையாக (நபித்தோழர்கள்) நட்டனர்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
"மதீனாவின் இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி என் நாவினால் (என் வாயிலாக) புனிதமானதாக ஆக்கப்பட்டுவிட்டது!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ ஹாரிஸா குலத்தினரிடம் நபி(ஸல்) அவர்கள் சென்று, 'பனூ ஹாரிஸா குலத்தினரிடம்! நீங்கள் ஹரம் எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள்!" என்றார்கள். பின்னர் திரும்பிப் பார்த்துவிட்டு. 'இல்லை! நீங்கள் ஹரம் எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள்!" என்றார்கள். 
அலீ(ரலி) அறிவித்தார். 
"அல்லாஹ்வின் வேதத்தையும் நபியவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறு எதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை! (இந்த ஏட்டில் உள்ளதாவது); 'ஆயிர் என்ற மலையிலிருந்து இன்ன இடம் வரை மதீனா புனிதமானதாகும். இதில் யாரேனும் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்தினால் அல்லது அவ்வாறு ஏற்படுத்துபவருக்கு அடைக்கலம் தந்தால், அல்லாஹ்வின் - வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் அவன் மீது ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம். உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது! முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றே! (அது, மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகக் கருதப்படவேண்டியதே)யாகும்! ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் ஏற்படும்! அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது! விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன், தன்(னை விடுதலை செய்த எஜமானர்களான) காப்பாளர்களின் அனுமதியின்றி, பிறரைத் தன் காப்பாளராக ஆக்கினால் அவன் மீதும் அல்லாஹ்வின்... வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது!"
யஸ்ரிப் என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன்! அதுதான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனா நகர் தீயவர்களை வெளியேற்றிவிடும்!" 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுமைத்(ரலி) அறிவித்தார். 
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தபூக்கிலிருந்து (யுத்தம் முடிந்து) திரும்பினோம். மதீனாவை நெருங்கியதும். 'இது 'தாபா!' (நலம் மிக்கது!)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"மதீனா வளமிக்க நகராக இருக்கும் நிலையில், இரைதேடக் கூடிய பறவைகளும் விலங்குகளும் மட்டுமே நாடி வரக்கூடியதாக அதை மக்கள்விட்டு(ச் சென்று) விடுவார்கள்! மறுமை நாளில், இறுதியாக எழுப்பப்பட விருப்பவர்களை முஸைனா குலத்தைச் சேர்ந்த இரண்டு இடையர்களே ஆவர்! 
(அவர்களின் மரணம் எப்படி நிகழுமெனில்) அவர்கள் இருவரும் தம் ஆடுகளை (இடையர்களின் பாணியில்) அதட்டி அழைத்த வண்ணம் மதீனாவை நாடிச் செல்வார்கள். (மதீனாவைச் சென்றடைந்ததும்) அதை (மனித சஞ்சாரமற்ற) மிருகங்களின் வசிப்பிடமாகக் காண்பார்கள்: இறுதியில் 'வதா' (எனும்) மலைக்குன்றை அடைந்தவுடன் முகம் குப்புற மூர்ச்சையுற்று விழுந்து (இறந்து) விடுவார்கள்!" 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"யமன் வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு (யமன் நாட்டிற்குச்) செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் 'ஷாம்' வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, 'தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்; ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?' 
என சுப்யான்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும்!" 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து போவார்கள்!" 
என ஸஅத்(ரலி) அறிவித்தார்.
உஸாமா(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள். பிறகு, 'நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள் வீடுகள் நெடுகிலும் (வருங்காலத்தில்) குழப்பங்கள் விளையக் கூடிய இடங்களை மழைத்துளிகள் விழும் இடங்களைப் (பார்ப்பதைப்) போன்று பார்க்கிறேன்!" என்று கூறினார்கள். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாசலிலும் இரண்டு வானவர்கள் இருப்பார்கள்!" 
என அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது!" 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!" 
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!" என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), 'நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'கொள்ள மாட்டோம்!" என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!" என்று கூறுவார். தஜ்ஜால் 'நான் இவரைக் கொல்வேன்!" என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!" 
என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். தஜ்ஜால் பற்றி நபி(ஸல்) அவர்கள் நீண்ட விளக்கம் தரும்போது இதைக் கூறினார்கள் என்றும் அறிவித்தார். 
ஜாபிர்(ரலி) அறிவித்தார். 
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதி மொழி கொடுத்தார். மறுநாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். '(இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கி விடுங்கள்!" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். 'மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும்! அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றி விடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள்!" என்று கூறினார்கள். 
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் 'இவர்களைக் கொல்வோம்!" என்றனர். அப்போது 'நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இரண்டு வகையான (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது?' (திருக்குர்ஆன் 04:88) என்னும் வசனம் இறங்கியது. 'நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரண்டு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!" 
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
அனஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து ஊர் திரும்பும்போது மதீனாவி(ல் உள்ள வீடுகளி)ன் சுவர்களைக் கண்டதும் தம் வாகனத்தை விரைந்து செலுத்துவார்கள். வாகனத்தில் மேல் அவர்கள் அமர்ந்திருந்தால் அன்புடன் அதைத் தட்டிக் கொடுப்பார்கள். 

No comments:

Post a Comment