Translate

Thursday, March 14, 2013

நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை!



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
“இப்படி நம்புவதற்கும், அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா? என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் ஆராய்வதற்கு முன், இது ஒரு மூட நம்பிக்கை தான் என்பதற்குரிய வேறு காரணங்களைப் பார்ப்போம்.
ஒரு நேரம், ஒரு நாள், ஒரு மாதம் எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது என்று நம்புவதும், அல்லது எல்லோருக்கும் கெடுதி செய்யக் கூடியது என்று நம்புவதும், இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதிக்கு மாற்றமானதாகும். ஒருவருக்கு மிகவும் நன்மைகள் வந்தடைந்த ஒரு நாள், இன்னொருவருக்கு கேடுகள் வந்தடைந்த நாளாக இருப்பதைத்தான் நடைமுறையில் நாம் காண முடிகின்றது. ஒரு நாளில் ஒருவருக்கு அழகான குழந்தை ஒன்று பிறந்திருக்கும். அவருக்குப் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் அதே நாளில் மரணமடைந்திருப்பார். நல்ல நாள் என்று ஒன்று இருக்குமானால் உலகத்தில் வாழுகின்ற அனைவருக்கும் அந்த நாளில் வெறும் நன்மைகளாகவே நடக்க வேண்டும், “கெட்ட நாள்” என்று ஒன்று இருக்குமானால், உலகத்து மாந்தர் அனைவருகக்கும் அந்த நாளில் கெட்டவைகள் மட்டுமே சம்பவிக்க வேண்டும்.
எந்த நாளாக இருந்தாலும் அதில் சிலருக்கு நல்லவை ஏற்படுவதும், சிலருக்குக் கெட்டவைகள் ஏற்படுவதும் தான் நடைமுறை உண்மை. இதைப் புரிந்து கொள்ள போதிய ஆதாரம் எதுவும் தேவை இல்லை. தங்கள் வாழ்க்கையிலேயே அனைவரும் அனுபவ ரீதியாக உணர முடியும்.
முஹர்ரம் மாதம் 10 ஆம் நாளை நாம் எடுத்துக் கொள்வோம். அந்த நாளில் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் படுெகாலை செய்யப்பட்டதினால் அது கெட்ட நாள் என்ற கூறினால், அதே நாள் மூஸா நபிக்கும், அவர்களைப் பின்பற்றிய மூமின்களுக்கும் நல்ல நாளாக அல்லவா இருந்துள்ளது. ரபீவுல் அவ்வல் பிறை 12ஐக் கவனியுங்கள்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவாகள் அன்று தான் பிறந்தார்கள் என்பதற்காக அது நல்லநாள் என்று சொன்னால், அதே நாளில் தானே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.
மனிதர்களுக்கு அல்லாஹ் எதை விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். நாட்களால் அதில் எந்த மாறுதலையும் செய்ய முடியாது என்பதற்கு இவை தெளிவான சான்றுகளாகும்.
ஸபர் மாதத்தில் நபியவர்கள் நோய்வாய்ப்பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால், (ஒரு கருத்துப்படி) ஸபர் மாதத்தில் அவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணம் மகத்தான வெற்றியை ஏற்படுத்தியுள்ளதே! அந்தப் பயணத்திற்குப் பின்பு தான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு இவை போதுமானதாகும்,
ஸபர் உட்பட இன்னும் என்னென்ன பீடை மாதம்(?) உண்டோ அத்தனையும் ஒதுக்கிவிட்டு நல்ல நாட்கள் (?) எவை உண்டோ அவற்றில் தான் நம்மவர்கள் எல்லா நன்மையான காரியங்களையும் செய்கின்றனர். செய்தனர் – தேர்ந்தெடுத்து நல்ல நாட்களில் நடத்தப்பட்ட பல திருமணங்கள் ஏன் ரத்து செய்யப்படுகின்றன? நாள் பார்த்து திருமணம் செய்த பல பெண்கள் விதவைகளாக இருப்பது ஏன்? நல்ல நாள் பார்த்துத் துவக்கப்பட்ட பல வியாபார நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தது ஏன்? நாள் பார்த்து அஸ்திவாரம் இட்டு, நாள் பார்த்துத் திறப்பு விழா நடத்திய பல கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போனது ஏன்? அந்த நம்பிக்கையில் இருப்போர் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை.
சின்ன நகஸு, பெரிய நகஸு என்றெல்லாம் கணித்து மக்களுக்குக் தொண்டு (?) செய்து வருகின்ற ஜோஸியர்களை, பால்கிதாபு, மோர் கிதாபு என்று சொல்லி மக்களை மடைமயிலேயே நீடித்திருக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களைக் – கொஞ்சம் கவனியுங்கள்! இவாகள் தங்களுக்கு மிகச் சிறந்த நல்ல நாளாகக் கணித்து அந்த நாளில் தங்கள் காரியங்களைத் துவங்கி நல்ல நிலையில் இருக்கிறார்களா? குறைந்தபட்சம் நல்ல நாளில் ஒரு தொழிலைத் துவக்கி மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறியுள்ளார்களா? இல்லையே! மாறாக மக்களிடம் ஐந்தையும் பத்தையும் கேட்டுப் பெறுகின்ற நிலைமையில் தானே அவர்கள் உள்ளனர். பால்கிதாபு என்பதும், நகஸு என்று சொல்வதும் பித்தலாட்டம் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
இதே ஸபர் மாதத்தின் இறுதி புதனில் தான் நபியவர்கள் குணமடந்து குளித்தார்களாம். அதனால் நாமும் ஒடுக்கத்துப் புதனில் குளித்து முஸீபத்தை நீக்க வேண்டுமாம். இந்த நம்பிக்கையின் பேயரால் இன்னும் பல மடமைகளும் நாட்டில் நடக்கின்றன.
ஸபர் மாதத்தின் இறுதியில் குளித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அவர்கள் குணமடைந்தது பூரண குணமல்லவே, அதற்கு இரு வாரங்கள் கழித்து அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டனரே! சரியான அறிவிப்பின்படி வியாழன் அன்று குளித்து விட்டு வெள்ளியன்று மக்களுக்கு நீண்ட பிரசங்கம் செய்தார்கள் என்று தானே உள்ளது. (அல்பிதாயா, வன்னிஹாயா) இந்த அடிப்படையில் ஓடுக்கத்து வியாழன் என்றல்லவா சொல்ல வேண்டும்?
ஒடுக்கத்துப் புதனுக்குச் சொல்கின்றற காரணமே முதலில் சரியாக இல்லை. அப்படியே சரியாக இருந்தாலும் நாநம் மேலே எழுதியுள்ள சந்தேகங்கள் அப்படியே இருக்கின்றன.
ஓலை, மாயிலை, கத்து என்று பல பெயர்களால் சில வாசகங்களை எழுதி, கரைத்துக் குடிக்க ஒன்று, தலையில் தெளித்து கொள்ள ஒன்று, வீடு வாசல்களில் தெளிக்க வேறொன்று என்று மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க சிலர் போட்ட திட்டமே ஒடுக்கத்துப் புதன் என்பது.
அன்றைய தினத்தில் கடற்கரைக்கு சென்று முஸீபத்தை நீக்குகிறோம் என்று நீராடி வருவதும் சில பகுதிகளில் நடந்து வருகின்றது. அன்றைய தினத்தில் நிறைய முஸீபத்துகள் இறங்கிக் கொண்டிருக்கிறதாம். கடலில் குளித்தால் அது நீங்குமாம்.
உண்மையில் இதில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதைத் தான் உணர முடிகின்றது. அன்றைய தினத்தில் நிறைய முஸீபத்து இறங்கினால் கதவு ஜன்னல்களை அடைத்துக் கொண்டு வீட்டிலே அல்லவா முடங்கிக் கிடக்க வேண்டும்! திறந்த வெளியாக உள்ள கடலில் நிறைய முஸீபத்துகள் அல்லவா இறங்கி இருக்கும்.
கடலில் போய்க் குளித்தால் எல்லா முஸீபத்துகளும் நம்மீது அல்லவா ஒட்டிக் கொள்ளும் என்று கேட்கக் கூடிய இளைஞர்கள் இன்று உருவாகி விட்டனர். கடல்களே இல்லாத நாடுகளில் இறங்குகின்ற முஸீபத்தை எப்படிக் கழிப்பதாம்?
இது போன்ற சடங்குகளை அறவே வெறுத்து வருகின்ற எத்தனையோ நாடுகளில் முஸீபத்துக்குப் பதிலாக செல்வங்கள் குவிந்துள்ளது ஏன்? என்றெல்லாம் மக்கள் இன்று சிந்திக்கத் துவங்கி விட்டார்கள்.
அன்றைய அரபிகள் ஷவ்வால் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி வந்தனர். அந்த நாட்களில் எந்த நல்ல நிகழ்ச்சியும் நடத்தாதிருந்தனர். இந்த மடமை எண்ணத்தைத் தகர்த்தெறியும் வகையில் அறிவுப் பேரொளி அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் “நான் ஷவ்வாலில் தான் மணமுடிக்கப்பட்டேன், ஷவ்வாலில் தான் என் இல்லறத்தைத் துவக்கினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என்னை விட உகந்த மனைவியாக யார் இருந்தார்?” என்று கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)
நீங்கள் பீடை என்று எண்ணி இருக்கின்ற ஷவ்வாலில் திருமணம் முடிந்த நான் எவ்வளவு மகிழ்வோடு வாழ்ந்திருக்கிறேன்? என்று அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கேட்டது இன்று ஸபரை பீடையாகக் கருதுவோர்க்கு பொருந்தாதா? சிந்தியுங்கள்!
“யாருடைய தொல்லையிலிருந்து அடுத்த வீட்டுக்காரன் பாதுகாப்புப் பெறவில்லையோ அவன் (தொல்லை விளைவிப்பவன்) சுவணம் செல்ல மாட்டான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம்.

No comments:

Post a Comment