Translate

Monday, October 21, 2013

இணை வைக்கும் இமாம்களைப் புறக்கணிப்போம்


அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் எல்லாற்றிற்கும் வழி காட்டுவது போன்று, இணை வைப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வழி காட்டுகின்றது. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். அல்குர்ஆன் 60:8, 9 இணை கற்பிப்பவர்களுடன் கொடுக்கல் வாங்கல், வியாபாரம் போன்ற உலக விஷயங்களில் உறவு கொள்வதை இந்த வசனங்கள் அனுமதிக்கின்றன. உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப் படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப் படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன். அல்குர்ஆன் 31:15 நமது பெற்றோர்கள் இணை வைப்பில் இருந்தாலும் அவர்களிடம் உலக விஷயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள இந்த வசனம் சொல்கிறது. அத்துடன் இந்த வசனம் தான் "ஃபித்துன்யா - இவ்வுலகில்' என்று குறிப்பிட்டு, முஷ்ரிக்குகளுடன் நாம் கொள்ள வேண்டிய தொடர்பை இம்மை, மறுமை என்று பிரித்துக் காட்டுகின்றது. இணை கற்பிப்பவர்களிடம் மறுமை, மார்க்க விஷயத்தில் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது என்று ஒரு பட்டியலையே போடுகின்றது. 1. திருமணம் 2. பள்ளிவாசல் நிர்வாகம் 3. பாவ மன்னிப்புத் தேடுதல் 4. ஜனாஸா தொழுகை போன்ற மார்க்க விஷயங்களில் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மார்க்கம் வலியுறுத்துகின்றது. இதற்கான ஆதாரங்களை இப்போது பார்ப்போம். திருமணம் இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்குர்ஆன் 2:221 ஒரு முஸ்லிமான ஆண், இணை வைக்கும் பெண்ணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது; ஒரு முஸ்லிமான பெண், இணை வைக்கும் ஆணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று இந்த வசனம் தெளிவாகக் கட்டளையிடுகின்றது. பள்ளிவாசல் நிர்வாகம் இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்குத் தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.  அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரைக் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன் 9:17, 18, 19 அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை யார் நிர்வகிக்க வேண்டும்? யார் நிர்வகிக்கக் கூடாது? என்பதையும், நிர்வகிப்பவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன என்பதையும் இந்த வசனங்கள் தெளிவுபடுத்தி விடுகின்றன. இன்று தமிழகத்தில் அதிகமான பள்ளி வாசல்கள் இத்தகைய இணை வைப்பவர்களிடம் தான் சிக்கித் தவிக்கின்றன. இந்த வசனத்தின்படி அவர்கள் இப்பள்ளிகளை நிர்வகிக்கும் தகுதியை இழக்கின்றனர். பாவ மன்னிப்புத் தேடுதல் இணை கற்பிப்பவர்கள் இறந்து விட்டால் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவதற்கும் அல்லாஹ் தடை விதித்து விட்டான். இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. அல்குர்ஆன் 9:113 இந்த வசனத்தின் மொழி பெயர்ப்பை நாம் இங்கு இடம் பெறச் செய்துள்ளோம். இந்த வசனம் இறங்கிய காரணங்கள், பின்னணிகள் ஆகியவற்றைப் பார்ப்போம். அந்தக் காரணமும், பின்னணியும் இதன் கருத்தை நம் உள்ளத்தில் பதிய வைக்கத் துணையாக அமையும். (நபி (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா பின் முஃகீராவையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதி மொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்'' என்று சொன்னார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் "அபூ தாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூ தாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, "நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்'' என்பதாகவே இருந்தது. லா இலாஹ இல்லல்லாஹ் எனும் உறுதி மொழியைச் சொல்ல அவர் மறுத்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும் வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்'' என்று சொன்னார்கள். அப்போது தான், "இணை வைப்போருக்காகப் பாவ மன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை'' எனும் (9:113வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்திய போது) அல்லாஹ், "நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான்'' எனும் (28:56வது) வசனத்தை அருளினான். நூல்: புகாரி 4772 இணை வைப்பில் இறந்தவர்களுக்கு முஸ்லிம்கள் பாவ மன்னிப்புத் தேடக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் ஐயத்திற்கிடமின்றி மிகத் தெளிவாக விளக்குகின்றது. நபி (ஸல்) அவர்கள் தமது தாயாரின் கப்ரைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள் தாமும் அழுது, தம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அழ வைத்து விட்டார்கள். "என்னுடைய தாய்க்குப் பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி தரப்படவில்லை. எனது தாயின் கப்ரைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஏனெனில் அது மரணத்தை நினைவூட்டுகின்றது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1622 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கே, அவர்களது தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு அனுமதி கிடையாது எனும் போது ஷிர்க் (இணை) வைத்து விட்டு இறந்த மற்றவர்களுக்கு எந்த ஒரு முஸ்லிமும் பாவ மன்னிப்புக் கேட்க அனுமதியில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஜனாஸா தொழுகை இணை வைப்பில் இறந்து போனவர்களுக்கு நாம் பாவ மன்னிப்புத் தேட முடியாது என்றாகி விடுகின்றது. ஒரு முஸ்லிம் இறந்தவுடன் நாம் தொழுகின்ற ஜனாஸா தொழுகை தான் நாம் அவருக்காகச் செய்யக் கூடிய தலையாய  பாவ மன்னிப்புத் தேடுதலாகும். எனவே ஜனாஸா தொழுகை என்ற இந்தப் பாவ மன்னிப்புப் பிரார்த்தனையை, முஷ்ரிக்காக அதாவது இணை வைத்து விட்டு இறந்தவருக்காக நாம் செய்ய முடியாது. இதற்குப் பின்வரும் வசனங்களும் வலுவூட்டுபவையாக அமைந்துள்ளன. (முஹம்மதே!) அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன் 9:80 அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர். அல்குர்ஆன் 9:84 நாம் மேலே பட்டியலிட்ட நான்கு விஷயங்களில் பள்ளிவாசல் நிர்வாகம் என்பது ஏகத்துவ வாதிகளை நேரடியாகப் பாதித்து விடுவதில்லை. ஆனால் திருமணம், மரணம் போன்ற விஷயங்கள் ஒவ்வொரு ஏகத்துவ வாதியையும் நேரடியாகப் பாதிக்க வைப்பவையாகும். ஏகத்துவவாதிகள் காணும் இரசாயனப் பரிசோதனை ஏகத்துவவாதியின் கொள்கைப் பிடிப்பு அவரது திருமணத்தின் போது இரசாயனப் பரிசோதனைக்கு உள்ளாகின்றது. ஏகத்துவக் கொள்கையில்லாத அவரது உறவினர்கள், தத்தமது மகளை திருமணம் முடிக்கச் சொல்லி அவரை அலைக்கழிப்பர். அது போன்று பகிரங்கமான இணை வைப்பில் உள்ள தந்தை அல்லது தாய் இறந்ததும் ஓர் ஏகத்துவவாதி இரசாயனப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றான். தன்னைப் பெற்ற தாய், தந்தையருக்காக அவர் செய்கின்ற இறுதிக் கட்டப் பிரார்த்தனையைச் செய்ய முடியாமல் ஆகும் போது அவர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றார். இந்தச் சமயத்தில் அவர் எதைத் தேர்வு செய்ய வேண்டும்? அல்லாஹ்வையும், அவனது தூதரையும் தான் தேர்வு செய்ய வேண்டும். நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பெற்றோரும், உங்களின் உடன்பிறந்தோரும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள். "உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்'' என்று கூறுவீராக! அல்குர்ஆன் 9:23, 24 ஏகத்துவ வட்டத்தைத் தாண்டி, இணை வைக்கும் தனது உறவினரிடம் அல்லது இணை வைக்கும் அந்நியரிடம் திருமண உறவு வைத்துக் கொண்டார் எனில் அவர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்னுக்குத் தள்ளி விட்டுத் தனது உறவை முன்னிறுத்துகின்றார். அது போன்று பகிரங்க இணை வைப்பில் இருந்த தாய், தந்தையர் இறந்து விட்டால் அவர்கள் மீதுள்ள அன்பு மேலிட்டு அவர்களுக்காக ஜனாஸா தொழுகை தொழுவாரானால் அவர் நிச்சயமாக அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்னுக்குத் தள்ளியவராவார். அல்லாஹ் நம்மைக் காப்பானாக! திருமணத்தின் போதும், மரணத்தின் போதும் இந்த இரசாயனப் பரிசோதனையில் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முன்னிலைப் படுத்தி, அவர்களைத் தேர்வு செய்தால் அவர் தான் உண்மையான ஏகத்துவவாதியாவார். அவர் தான் இந்தப் பரிசோதனையில் வெற்றி பெற்றவர் ஆவார். மறுமை உறவுக்குப் பயன் தராத உறவுப் பந்தங்கள் ஓர் ஏகத்துவவாதி, அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்னுக்குத் தள்ளி விட்டு, தனது உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரானால் அவருக்கு அல்லாஹ் ஓர் எச்சரிக்கையை விடுக்கின்றான். கியாமத் நாளில் உங்களின் உறவினரும், உங்கள் சந்ததிகளும் உங்களுக்குப் பயன் தரவே மாட்டார்கள். உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிப்பான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். அல்குர்ஆன் 60:3 எனவே இந்த வசனத்தைக் கருத்தில் கொண்டு ஓர் ஏகத்துவவாதி, இணை வைப்பவர்களிடம் தனது உறவு முறையைக் கொள்ள வேண்டும். இதற்குச் சிறந்த ஒரு முன்மாதிரியாகத் தான் இந்த அத்தியாயத்தில் மேற்கண்ட வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்களில் அல்லாஹ், இப்ராஹீம் (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தையும் குறிப்பிடுகின்றான். "உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. "உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) "எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது. எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (என்றும் பிரார்த்தித்தார்.) அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன். அல்குர்ஆன் 60:4, 5, 6 இபாதத் - வணக்கம் என்பது மறுமை சம்பந்தப்பட்ட விவகாரம் ஆகும். அந்த மறுமை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரைப் பின்பற்றியவர்களும் தங்கள் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் புறக்கணிக்கின்றார்கள். பகிரங்கமாகப் பகைத்துக் கொள்கிறார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் இந்த நிலைப்பாட்டில் தான் அழகிய முன் மாதிரி இருக்கின்றது என்று கூறி அல்லாஹ் பாராட்டுகின்றான். அந்த முன்மாதிரியைத் தான் நாமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இறைவன் விரும்புகின்றான். ஆனால் இப்ராஹீம் (அலை) அவர்களின் நிலைப்பாட்டில் ஒரேயொரு தவறு ஏற்பட்டு விடுகின்றது. "உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்'' அல்குர்ஆன் 19:47 தமது தந்தைக்காக அவர்கள் பாவ மன்னிப்புத் தேடுவேன் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியது தான் அந்தத் தவறாகும். ஆனால் அது தவறு என்று விளங்கியதும் இப்ராஹீம் (அலை) அவர்கள் அதிலிருந்து விலகி விடுகின்றார்கள். இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். அல்குர்ஆன் 9:113 இணை வைப்பவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடக் கூடாது என்பது இறைவனின் விருப்பம். இதை இப்ராஹீம் (அலை) அவர்கள் அப்படியே நிறைவேற்றுகின்றார்கள். இதனால் அவரைப் பணிவுள்ளவர், சகிப்புத் தன்மையுள்ளவர் என்று இறைவன் பாராட்டுகின்றான். இணை வைக்கும் இமாம்களைப் பின்பற்றுதல் இணை வைப்பவர்களை மறுமை மற்றும் இபாதத் விஷயத்தில் புறக்கணிப்பது தான் அல்லாஹ்வின் விருப்பம் என்றிருக்கும் போது இன்றைய இணை வைக்கும் இமாம்களை நாம் புறக்கணிக்காமல் இருப்பது நியாயமாகுமா? (முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! அல்குர்ஆன் 6:106 உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! அல்குர்ஆன் 15:94 இணை வைப்பவர்களைப் புறக்கணியுங்கள் என்று இந்த வசனங்களில் அல்லாஹ் கூறிய பிறகு அவர்களைப் புறக்கணிக்காமல் இருக்க முடியுமா? புறக்கணிப்பு என்றால் அது உலக விஷயங்களில் கிடையாது என்பதை மேலே நாம் கண்டோம். எனவே இணை வைப்பவர்களைப் புறக்கணித்தல் என்பது மறுமை தொடர்பான விஷயங்களில் தான் என்பது நமக்கு நன்கு தெளிவான பிறகு எப்படி இணை வைக்கும் இமாம்களை நாம் தொழுகையில் பின்பற்ற முடியும்? அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுவது கூடுமா? கூடாதா? என்பது தனியாக ஆய்வு செய்ய வேண்டிய விஷயம். நாம் மேலே கண்ட வசனங்களின் அடிப்படையில் முதன் முதலில் நம் மீதுள்ள கடமை அவர்களது இமாமத்தைப் புறக்கணிப்பது தான். இப்ராஹீம் (அலை) அவர்களின் புறக்கணிப்பில் முன்மாதிரி இருக்கின்றது என்று சொன்ன இறைவன், இணை வைப்பவர்களிடம் இருந்து நம்மை விலகச் சொன்ன ரப்புல் ஆலமீன், தானும் அவர்களிடமிருந்து விலகி விட்டதாகக் கூறுகிறான். இணை கற்பிப்போரிடமிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் விலகிக் கொண்டனர். இது, இம்மாபெரும் ஹஜ் நாளில் மக்களுக்கு அல்லாஹ்வுடைய, அவனது தூதருடைய பிரகடனம். நீங்கள் திருந்திக் கொண்டால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் புறக்கணித்தால் நீங்கள் அல்லாஹ்வை வெல்ல முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! துன்புறுத்தும் வேதனை பற்றி (ஏக இறைவனை) மறுப்போரை எச்சரிப்பீராக!  அல்குர்ஆன் 9:3 இப்படி அல்லாஹ் எவர்களை விட்டும் நீங்கி விட்டானோ அவர்களுடன் எப்படி நாம் உறவு கொள்ள முடியும்? அதிலும் குறிப்பாக, தொழுகை என்ற முக்கியமான வணக்கத்தில் அவர்களை எப்படிப் பின்பற்ற முடியும்? பி.ஜே. என்ற தனி மனிதர் எதைச் சொன்னாலும் எதிர்க்க வேண்டும் என்ற குருட்டுச் சித்தாந்தத்தில் சிலர் உள்ளனர். இவர்கள் தான் இணை வைக்கும் இமாம்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்ற பிரச்சாரத்தை இப்போது செய்து வருகின்றனர். இந்த ஆசாமிகள் ஷிர்க் என்ற மாபாதகச் செயலைப் பார்க்கவில்லை. மக்கத்துக் காஃபிர்கள் செய்தால் அது ஒரு ஷிர்க்; இன்று முஸ்லிம்கள் என்ற பெயரில் செய்தால் அது வேறு ஷிர்க் என்று ஷிர்க்கில் வேறுபாடு காட்டுகின்றனர். ஆனால் இவர்களின் இந்தக் கருத்தை அல்லாஹ் தகர்த்தெறிகின்றான். "நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர் மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. அல்குர்ஆன் 39:65 இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். அல்குர்ஆன் 6:88 இந்த முஸ்லிம்கள் மறுமையை, வேதத்தை, இறைத் தூதர்களை நம்புகிறார்கள். ஐந்து வேளை தொழுகின்றார்கள்; நோன்பு நோற்கிறார்கள்; ஹஜ் செய்கிறார்கள்; ஜகாத் கொடுக்கிறார்கள். எனவே இவர்களை எப்படி முஷ்ரிக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? என்று நினைக்கிறார்கள். அதனால் தான் இவர்களைப் பின்பற்றித் தொழலாம் என்ற வாதத்தை வைக்கின்றார்கள். இப்படிச் சொல்பவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை வசதியாக மறந்து விடுகின்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை. அல்குர்ஆன் 12:106 அல்லாஹ்வை நம்பிய ஒருவன் இணை கற்பித்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதைத் தான் இந்த வசனம் காட்டுகின்றது. எனவே இணை வைக்கும் இமாம்களைப் பின்பற்றலாமா? என்ற ஆய்வுக்கே நாம் போக வேண்டியதில்லை. இணை வைக்கும் இந்த இமாம்கள், அல்லாஹ்வை மட்டும் ஈமான் கொள்கின்ற வரை அவர்களைப் புறக்கணிப்போம். அவனை மட்டும் தனித்துப் பிரார்த்திக்கின்ற வரை அந்த இமாம்களைப் பின்பற்றித் தொழவும் மாட்டோம்.

No comments:

Post a Comment